Thursday 3 March 2016

நிழலெனப் பிரகாசிக்கும் ஐந்தாம் பரிமாணம்!


நூல் பொம்மையின் ஆட்டம்
நூல்களில் இருந்து
விடுபட்ட பிறகுதான் துவங்குமென
நெருப்பின் நிழலோடு
வாதம் செய்து கொண்டிருக்கின்றன
இரு கண்கள்!

நான்கு இழைகளில்
ஆன்மாவைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும்
அந்த பொம்மையின் கண்கள்
எதிரே குவிந்திருக்கும்
கூட்டத்தில் தேடுவது
நிச்சயம் உன்னையல்ல!

அது நான்காவது பரிணாமத்தின்
இல்லாதிருத்தலை நிறைத்துக்கொண்டிருக்கும்
எல்லையற்ற ஏகாந்தப்
பெருவெளியாக இருக்கலாம்!


அங்கு கணக்குகளை மறந்த
அகால அடைவுகளையும்
பெயரற்று உருகும்’
ஸ்வரக் கோர்வைகளையும்
என் இருப்பு இயக்கிக்கொண்டிருக்கலாம்!

அக்கணம் பாதங்கள்
தரையை மறந்த களிப்பில்
ஒவ்வொரு செல்லும்
தன்னைத்தானே இசைத்தபடி
தனித்தனியே அதிரத் துவங்கலாம்!

அந்த அதிர்வின் அடர்த்தி தாளாமல்
ஏதேனும் ஒரு செல்
உடைந்து சிதற நேர்ந்தால்
தரையிழுக்கும் ஈர்ப்பு சக்தியாக மட்டும்
நீ இருந்துவிட்டுப்போ!

நூல் பொம்மையின் இயக்கமும்
புவியீர்ப்பு சக்தியைச் சார்ந்ததென
வாதம் முடக்கப்படுகிறது!

அதோ!
விழுந்து கொண்டிருக்கும்
வால் நட்சத்திரத்தின்
ஐந்தாவது முனையிலிருந்து
நீளும் ஐந்தாவது பரிமாணத்தின்
நிழல்தான் இந்த இருண்ட வானமெனவும்
அதுவே நீயெனவும்
என் கண்களைச் சிமிட்டுகிறாய்!

நெருப்பின் நிழல்
இருண்மையை நீயெனப் பிரகாசித்து
நடனமிட்டுக் களிக்கிறது!
-நிவேதா



உணர்வுபிறழ்வை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்கான வேண்டுதல்...


110 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னான 
பரிணாம வளர்ச்சியில்,
நிறங்களின் உணர்திரனற்ற
என் கண்களை எண்ணி முதல்முறை அழுகிறேன்!

இன்று அதிகாலை
இழுதுமீன் என நினைத்து
நான் உண்ட நெகிழித் துண்டு
என் சிறுகுடலை அடைத்துக் கொண்டிருக்கிறது!

என்னால் நீந்த முடியவில்லை!
நீந்துவதென்ன?அசைய கூட முடியவில்லை!
இந்த ராட்சத மூலக்கூற்றை எதிர்கொண்ட
என் உடலின் நோயெதிர்ப்பு அணுக்கள்
பயந்துபோய் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருக்கின்றன!

அந்த நெகிழியை வெளிக்கொணர
பதினெட்டு மணிநேரமாக முயன்றுகொண்டிருக்கிறேன்...
அடிவயிற்றில் ஏதோ பலமாக அழுத்துவது போல் உள்ளது!

ஒரு மாதத்திற்கு முன்தான்
நான் பிறந்த மணற்பரப்பிற்கு சென்று
முட்டையிட்டு வந்தேன்...
124 முட்டைகளைச் சுமந்துகொண்டு நீந்தும்போது கூட
என் அடிவயிறு இவ்வளவு பாரமாக இல்லை!

நான் பிறந்த இடம் முன்போலில்லை!
இத்தனை ஆண்டுகளாக என் மூளையில்
படிமங்களாய் பதிந்திருந்த காட்சிகளுக்கும்
சமீபத்திய காட்சிகளுக்கும் அப்பப்பா...
600 வித்யாசங்கள்!!!
என் மைய நரம்பு மண்டலத்தில்
ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும்!

என் குடலை அடைத்துக்கொண்டிருக்கும்
இதன் வாசனை எனக்குப் புதிது போலில்லை!
அந்த கடல்பரப்பின் மணலும் இதைப்போல் தான் மணத்தது!

மணலின் வெப்பமும் வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது!
அதன் முப்பது டிகிரிக்கும் அதிகமான வெப்பம்,
முட்டைகளில் பெரும்பான்மைக்குப் பெண்ணுடல் அளித்திருக்கும்!
அவைகள் கடலுக்குள் வந்தபிறகும்
அந்த பாவப்பட்ட மணற்பரப்பிற்கு
மீண்டும் செல்லவேண்டி இருக்கும்!

என் ஓட்டின்மீது ஏதோ உரசிசெல்கிறது.
என்னவென்று உணரமுயல்கிறேன்.
என் வயிற்றை அடைத்துக்கொண்டிருக்கும்
பொருளைப் போலத்தான் தெரிகிறது!

கண்களை விரித்துச் சுற்றிப்பார்க்கிறேன்.
வேறு வேறு அளவுகளில்...
வேறு வேறு வடிவங்களில்...
நெகிழி...நெகிழி...நெகிழி...
எனக்கு வாயைத் திறக்கவே பயமாயிருக்கிறது!
என் அனைத்து மெல்லுறுப்புகளையும்
ஓட்டுக்குள் அடக்கிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது!
என் துர்பாக்கியம்!நான் நன்னீர் ஆமையல்ல!
உலகத்தின் 71 சதவிகித மேற்பரப்பை
சொந்தம் கொண்டாடும் பாவப்பட்ட கடலாமை!

கண்களை மட்டும் இறுக மூடிக்கொள்கிறேன்!
இன்னும் கொஞ்சநாளில்
குஞ்சுபொறித்து வெளிவரப்போகும் என் பிள்ளைகள்
நெகிழியுண்டு வலியில் துடிக்கும் கொடூரக்காட்சி!

அடிவயிற்றில் அழுத்தம் இன்னும் அதிகமாகிறது!
ஆற்றாமை என் தலையையும் சேர்த்து அழுத்துகிறது!
என் மையநரம்பு மண்டலத்தில்
உண்மையாகவே ஏதேனும் பிறழ்வு ஏற்பட்டு,
என் அத்தனை உணர்வுகளும் துண்டிக்கப்பட்டால்
எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!
c51230297635845f34565346f9d704aa.jpg
-நிவேதா








ஆதி உள்ளுணர்வின் பெருங்காடு

எனக்கான பாதையில்தான்
உனக்கான வெளிச்சம் பூக்கிறது என்பதை
நினைவில் வைத்துக்கொள்!

ஒரு பெருங்காட்டின் பேரிரைச்சலை
என் செவிமடல்கள் தாங்கிக் கண்டிருப்பதை
உன் உதடுகள் கவனித்துக் கொள்ளட்டும்!

ஆதிபச்சையத்தின் முதல் துளிர்
சிலிர்க்கவைத்த ரெட்டினல் திரையை
புதைத்து வைத்திருப்பது என் கண்கள் என்பதை
உன் இருப்பு உறுதிப்படுத்திக் கொள்ளட்டும்!

அடர்வனத்து முதல் பூவையும்
வேட்டை மிருகத்தின் மாமிச மிச்சத்தையும்
பிரித்து உணரும் செல்கள் என் நாசியில் ஜனனமானதை
உனது இந்த நொடி மூச்சுக்காற்று
சொல்லிவிட்டு நுழையட்டும்!

ஒரு சிட்டெறும்பின் முதல் அசைவு
சிலிர்ப்பூட்டும் எனது உள்ளுணர்வு
உனது உயிர்பிரியும் கணத்தையும் குறித்துவைத்துதான்
மரணிக்கும் என்பதை மறந்துவிடாதே!

-நிவேதா





Sunday 3 January 2016

செவிகளை ஏமாற்றும் அகாலத்தின் ஓசை


என்னுடலின் ஒரு பழைய செல் உடைந்து
புதிய செல்களாய் ஜனனிக்கும் ஓசை
இன்று மிகத்துல்லியமாய்க் கேட்கின்றது!
என் தோட்டத்தின் பழங்களெல்லாம்
கனிந்து மணந்திருந்த
பனியிரவின் கனவொன்றில்
நீ சொன்ன செய்தியிலிருந்து
என் செவிகளை இவ்வாறு
பக்குவப்படுத்தி வைத்திருக்கிறேன்!
சில காலமாக இங்கே வந்துகொண்டிருக்கும்
ஒற்றை வௌவாலுக்கு
அதன் குரலின் எதிரொலியே
கண்களாய் வழிநடத்தி
என் கனிகளை காட்டிக்கொடுக்கிறது
எனச் சொல்லி மறைந்தாய்!
கற்றதும் கண்டதும் போக,
கேட்டே உறுதிபடுத்திக் கொள்வோமென
காதுகளை திறந்துவைத்து
உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.
வௌவாலின் குரல் நம் செவிகளுக்கு கேட்காதென
பிறகொரு ஜாமத்தில் சொல்லி
மீண்டும் மறைந்தாய்!
நிலவற்ற அந்த இரவிலிருந்து
வௌவால் எழுப்பும் அந்த ஒலி
உன் பெயராகத்தான் இருக்குமென்ற நினைப்பு
வேரூன்றி வளர்கிறது!
பக்குவப்படுத்தலின் முதல் கட்டமாக
காய் கனிகின்ற ஓசை கேட்டது!
அடுத்தடுத்த கட்டங்களில் துல்லியம் கூட,
என் உடலில் 1,18,488 செல்கள்
இந்த நிமிடம் இறந்திருக்கின்றன என்று
கணக்கெடுத்து வைத்திருக்கிறேன்!
அந்த வௌவாலின் குரல் மட்டும்
இன்னும் கேட்டப்பாடில்லை!
சோடியம் வெளிச்சத்தில் என் முகத்தை
நீ ரசித்த குளிர் நினைவை மீட்டெடுக்க
கையில் லாந்தரோடு காத்திருக்கிறேன்!
முப்பது நாட்களும் மனதை உறுத்தி
உயிரை சுரண்டியே எடுக்கும்
விடாய் வலியாய் வதைக்கிறாய்!
என் தோட்டத்தில் மட்டும் வசந்தம் விடுவதாயில்லை
பூக்கள் வாசத்தை முடக்கிக் கொள்வதாயில்லை
மரங்கள் கனி தருவதை நிறுத்திக் கொள்வதாயில்லை
வௌவால் தன் பாதையை மறந்து தொலைப்பதாயில்லை
நீயும் வருவதாயில்லை!
இந்த அகால தனிமையில்
நீர்த்துப்போகும் என் உயிரைத் தேக்கி
தோட்டத்து வேர்களுக்குப் பரிசளித்தபின்
கனிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதென
அந்த வௌவால் வந்து சாட்சி சொன்னாலாவது
என் நினைவு வந்து திரும்புவாயா?
-நிவேதா

Saturday 10 October 2015

வெளிச்ச வெறுமையின் இருள் கமழும் கண்கள்



திரைச்சீலைகள் அகற்றப்பட்ட ஜன்னலின்
வெளிச்ச வெறுமை நீ!
நிசியில் உன் கண்களாய்ப் பூத்து
என் நாசியில் சில்லிட்ட பவழமல்லிப்பூக்கள்
விடியலில் என் செல்களாய்
உதிர்வதை எண்ணிப் பரிதாபப் படுகிறேன்!
உன் கண்களுக்கொரு வாசமுண்டு!
என்னைத் தவிர வேறு யாரும்
உணர்ந்திருக்க முடியாது!
விழுந்து மறைந்த
ஓர் ஆதிநட்சத்திரத்தின் துகளை
என் அலமாரியின் இருட்டில்
புதைத்து வைத்திருக்கிறேன்!
அதன் இருள் கமழ்கிறது
உன் கண்களாய்!
வெளிச்சமற்றதே இருளென்றால்
இருளில் இருப்பதுதான் என்ன!
ஏதுமற்ற சூன்யத்தின் பரிபூரணமாய்
அழுத்தத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கும்
அந்த இருப்பு
நீயாகத்தான் இருக்க வேண்டும்!
இருளின் வாசம் தித்திக்கிறது!
அப்படியே உன் கண்களைப்போல!
அதனை ஸ்பரிசிக்க இசைந்து
கைகளில் அள்ளி
கன்னத்தில் ஒற்றிக்கொள்ள
நேரும் கணத்தில் தான்
வெளிச்ச வெறுமையாய்
தகிக்கத் துவங்குகிறாய்!
உண்மைதான்!
ஜன்னல் திரைகள் பற்றி
எனக்கு எந்த கருத்தும் இல்லை.
-நிவேதா

Thursday 13 August 2015

மழைநீரின் கசப்புத்தன்மை


அந்தக் கோப்பையை நிறைத்துக் கொண்டிருக்கும் 
தேநீரின் நிறமும் கதகதப்பும் 
தான் எனக்கு தேவைப் படுகிறது!

அதன் கசப்புத்தன்மையைப் பிரித்தெடுத்து,
நனைந்த என் கூந்தல் இழையிலிருந்து
சொட்டும் மழை நீரில் கரைத்து,
அவன் கூட்டுக் கதவைத் தட்ட எத்தனிக்கிறேன்!

இந்த மழைநாளில் இப்படியொரு பரிசை
அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டான்!

அவன் நாவின் சுவையுணர்த்தும் செல்களெல்லாம்
அந்த கசப்புதன்மையைத்
தக்கவைத்துக்கொள்ள வேண்டுகிறேன்!

இனி அவன் பருகும் ஒவ்வொரு மிடர் மழைநீரும்
என் காட்டுத்தனத்தையே பிரதிபலிக்கும்!

அந்த கசப்புத்தன்மை அவன் நாடிநரம்பெல்லாம்
பரவிப் பெருகி அமரத்துவம் அடைய,
இந்த ராட்சஷியின் கொடூரத்தை
நினைத்து நினைத்தே சாகட்டும்!

-நிவேதா

Friday 22 May 2015

மூளையின் மடிப்புகளில் புதையுண்ட ஒரு ஸ்வரத்தைத் தேடி பூமியின் மையத்திற்கு ஒரு பயணம்...


நரம்புகளற்ற அந்த வீணையின் குடம்
சுழலடிக்கின்ற அதிர்வை
எந்த ஸ்வரத்தில் சேர்ப்பேன் நான்!

பல நூற்றாண்டுகளாய்
மண்ணுக்குள் புதையிடிருந்த
மனித எலும்பினாலான புல்லாங்குழலையும்
தோண்டியெடுத்து இசைத்துப்பார்த்தாகி விட்டது!
இல்லை...அந்த ஸ்வரம் மட்டும் இல்லை...

அதன் ஒரு துளை,
என் மூளையைத் தொட்டுவிட்டு வந்த
மூச்சுக்காற்றில் அந்த அதிசய ஸ்வரத்தின்
சாயல் இருப்பதாகக் கூறியது.
இன்னொரு துளை,
அந்த சாயலைக் கழற்றிவிட்டு வருமாறு எச்சரித்தது.
ஒருவாறு முயன்றேன்...
மூன்றாவது துளை நடத்திய தேர்வில்
படுதொல்வியிய மிச்சம்!
நான்காவது துளைக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைந்தேன்...
ஐந்தும் ஆறும் உண்மையறிந்து கண்ணடித்துக் கொண்டன...
ஏழாவது துளை,
தன்னைப் பிரபஞ்சத்தின் ‘ப்ளாக் ஹோல்’ ஆக
பிரகடனப் படுத்திக் கொண்டது...
அதை என் சுண்டு விரலால் அடித்தேன்...
தன் விரதம் களைந்த ஆற்றாமையில்,
அக்குழல் என் விலா எழும்பினால் ஆனது
என்று அனுமந்த ஸ்தாயியில் அழுதது!
தோண்டியெடுத்த இடத்திலேயே புதைத்துவைத்து வந்தேன்!

அந்த வீணையில் அதே அதிச ஸ்வரம் கசிந்து கொண்டிருந்தது!

குடத்தில் ஏதோ கோளாறு என,
கையை விட்டுத் துழாவினேன்...
அதில் சிக்கியதேல்லாம் ‘ம்’ என்ற அவன் ஒற்றைச்சொல்லின்
வேறு வேறு பரிமாணங்களே!!!
அவற்றிடம் என் கேள்விகளை அடுக்கினேன்...
இயற்பியல் ஆய்வுக்கூடத்தில்
குழிப்பரிவுக் கருவியை அனுகச்சொல்லின!

தேடிச்சென்ற நான் அதனுள்ளேயே விழுந்துவிட்டேன்!
சீறிக்கொண்டு வந்த கோபத்தில்
என் சக்தியெல்லாம் திரட்டிக் கத்தினேன்!
அக்கருவி தன் காதுகளைப் பொத்திக்கொண்டு,
அந்த வீணையின் குடதிற்கே என்னை அனுப்பிவிட்டது!!!


மறுபடியும் அதே ஸ்வரம்...
என் மூளையைத் தனிமைப்படுத்த எண்ணி,
அதன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டேன்.
உந்துவிசை அடங்கிய கணத்தில்
அந்த ஸ்வரம் அனுதார ஸ்தாயியில் சிரித்து
என் சித்தத்தை சிதறடித்தது!!!

இன்றிலிருந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு
புதையுண்டு கிடைக்கப்போகும் இந்த வீணையில்,
என் நரம்புகள் முளைத்திருக்கும் என்றும்,
அதை நானே தோண்டியெடுத்து
இசைதுப்பார்பேன் என்றம் வெறித்தன
அவன் சாயலில் இருந்த அப்பூனையின் கண்கள்!!!
அப்போதாவது அந்த ஸ்வரத்தின்
மர்மம் மறையுமா எனச் சந்தேகித்தேன்...
கண்களை இறுக மூடிக்கொண்டது அப்போனை!
குடமெல்லாம் இருள்...
பூமிக்குள் புதைந்து கொண்டிருந்தது அந்த வீணை!

artissimo1.jpg
-நிவேதா